போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 20-06-2023
தேசியம் :-

- அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் உலகின் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கம்ப்யூட்டர், மொபைல்போன் பயன்பாடுகளுக்கான மெமரி சேகரிப்பு பாகங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.
- தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
- மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம், அதற்கு தேவையான செமிகண்டக்டரை அதன் சீன ஆலையிலிருந்து பெற்று வருகிறது. சீனா தவிர்த்து, வேறு நாடுகளில் ஆலை அமைக்க திட்டமிட்ட அந்நிறுவனம், இந்தியாவில் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் :-

- 2023 ஏப்ரல், மே மாதத்தில் நேரடி வரி வசூல் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் இரண்டரை மாதங்களில் நேரடி வரி வசூல் ரூ.3.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
- 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பீடுகையில் நேரடி வரி வசூல் 11.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கார்ப்பரேட் வரி வசூல் ரூ.1.57 லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமான வரி - பத்திர பரிவர்த்தனை வரி ஆகியவற்றுக்கான வரி வசூல் ரூ.2.22 லட்சம் கோடியாக உள்ளது.
நேரடி வரி என்றால் என்ன?
- நேரடி வரி என்பது ஒரு நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்பட்டு அரசுக்கு நேரடியாக செலுத்தக் கூடியதாகும். அவ்வரியின் சுமையை பிறருக்கு மாற்ற இயலாது.
- வரி வளர்வீத தன்மை கொண்டது. ஒரு நபரின் செலுத்தும் திறனுக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படும்.அதாவது, பணக்காரர்களிடமிருந்து அதிகமான வரியும் மற்றும் ஏழை மக்களிடமிருந்து குறைவான வரியும் வசூலிக்கப்படும்.
- நேரடி வரி சார்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்திய அரசு, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரி வாரியத்தால் பரிந்துரை செய்யப்படுகிறது.
- நேரடி வரி உதாரணம் - வருமான வரி,நிறுவன வரி,சொத்து வரி,நன்கொடை வரி,நில வரி,தொழில் வரி,வங்கி பண மாறுதல் வரி
முக்கிய குறிப்புகள்
- இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1866-ஆம் ஆண்டு, கவர்னர் ஜெனரல் டஃப்ரின், வருமான வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் முறைப்படியான முதல் வரிச் சட்டம்.
- 1963-ஆம் ஆண்டு, மத்திய ‘நேரடி வரி' வாரியம் உருவானது.
- இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரி மூலம் அதிக வரி வருவாய் வசூலிக்கப்படுகின்றது.
விருதுகள் :-

- 2021-ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு வழங்கப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
- கோரக்பூரில் 1923-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கீதா பதிப்பகம், இந்து மதம் தொடர்பான நூல்களை வெளியிடும் உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் ஒன்றாக திகழ்கிறது.
- இந்த பதிப்பகம் 41.7 கோடி புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இதில் 14 மொழிகளில் வெளியான பகவத் கீதையின் எண்ணிக்கை மட்டும் 16.21 கோடி ஆகும்.
காந்தி அமைதி பரிசு பற்றிய குறிப்புகள்
- 1995-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சர்வதேச காந்தி அமைதி விருது மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
- ரூ.1 கோடி ரொக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை அடங்கிய இந்த விருது, அகிம்சை உள்ளிட்ட காந்திய வழியில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- இவ்விருதிற்கான தேர்வுக்குழுவின் தலைவர் - பிரதமர்
விளையாட்டுச் செய்திகள்:-

- ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பின்(Asian Fencing Championship) மகளிருக்கான சேபர் பிரிவு அரைஇறுதி சுற்றில் இந்தியாவின் சி.ஏ.பவானி தேவி, உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவுடன் கடுமையாக போராடி 14-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அரை இறுதியில் தோல்வி அடைந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- இதன் மூலம் ஆசியவாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் பவானி தேவி.
- ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் நடைபெற்று வருகிறது.
- முன்னதாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றதன் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் பவானி தேவி.
முக்கிய நாட்கள் :-

- ஐ.நா.சபையால் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் உலக அகதிகள் தினம் ஜீன் 20-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- இது உலகம் முழுவதும் உள்ள அகதிகளை கொண்டாடவும், அவர்களை மரியாதை செய்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.
- 2001-ஆம் ஆண்டு ஜீன் 20-ஆம் தேதி இந்த தினம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 20, 1951 அன்று முதன்முதலில் அகதிகளின் நிலை தொடர்பாக மாநாடு ஜெனீவாவில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் 50ஆவது ஆண்டை நினைவுகூறும் விதமாக உலக அகதிகள் தினம்அறிவிக்கப்பட்டது.
- இந்த ஆண்டின் கருப்பொருள்: “Hope away from home”
முக்கிய குறிப்புகள்
- ஒவ்வொரு நிமிடத்திலும் 20 பேர் அகதிகளாக்கப்படுகிறார்கள்.
- அதிக அகதிகளை உருவாக்கும் நாடு (சிரியா-68 லட்சம்)
- அதிக அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு(துருக்கி -36 லட்சம்)
இராணுவம் :-

- இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலர் (ரூ.24,500 கோடி) மதிப்பில் 31 அதிநவீன ஆயுதமேந்திய MQ-9B ட்ரோன்களை வாங்க கடந்த வாரம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.
- அமெரிக்காவிடமிருந்து ட்ரோன்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும்பட்சத்தில், முதற்கட்டமாக 10 ட்ரோன்கள் ஆயுதமில்லாமல் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மொத்தமுள்ள 31 ட்ரோன்களில் 15 ட்ரோன்கள் கடல் பரப்பைக் கண்காணிக்கவும், 16 ட்ரோன்கள் நிலப்பரப்பைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Tags:
Current Affairs