போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 07-08-2023
தேசியம் :-

- அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
- உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்கள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும். மத்திய பிரதேசத்தில் 34 நிலையங்கள் ரூ.1,000 கோடியிலும், மகாராஷ்டிராவில் 44 நிலையங்கள் ரூ.1,500 கோடியிலும், தமிழகத்தில் 18 நிலையங்கள் ரூ.515 கோடியிலும் புதுப்பிக்கப்பட உள்ளன.
- இதில் தமிழகத்தில் அரக்கோணம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, கரூர், மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பூர், போத்தனூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 18 ரயில்நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

- பாரத்நெட் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களுக்கு இணையவசதியை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
- இதுவரை சுமாா் 1.94 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இணையவசதி வழங்கப்பட்டுவிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இந்நிலையில், பாரத்நெட் திட்டத்தின் கீழ் 6.4 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதியை வழங்க ரூ.1,39,579 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாரத் பிராட்பேண்ட் நெட்வொா்க் நிறுவனமானது கிராமங்களில் இணையவசதியை வழங்கி வருகிறது.
- இத்திட்டத்தின் கீழ் இணைய சேவையானது மாதத்துக்கு ரூ.399 என்ற மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
- இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமாா் 37 லட்சம் கி.மீ. தூரத்துக்கு கண்ணாடி ஒளியிழை கம்பிவடம்(Optical fibre) பொருத்தப்பட்டுள்ளது.
- இத்திட்டம் சுமாா் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சர்வதேசம் :-

- தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 2023 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு தென் ஆப்பிரிக்கா தலைமை வகிக்கிறது.
- இந்தக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சிமாநாடு அந்த நாட்டின் தலைநகா் ஜோஹன்னஸ்பா்கில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது.
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு :-

- முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, திமுக சார்பில் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்-2023’ சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்முறையாக ஒரே இடத்தில் 50,629 ஆண்கள், 21,514 பெண்கள் என 73,206 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர்.
- இந்தப் போட்டி 42, 21, 10 மற்றும் 5 கி.மீ. ஆகிய 4 பிரிவுகளில் நடைபெற்றது.
- 1,063 திருநங்கை, திருநம்பிகள், 500-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 1,500 கடலோர காவல் படை, ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
- மாரத்தான் போட்டி பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.3.43 கோடியை,ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 2021-இல் அகழாய்வுப் பணி தொடங்கியது.
- இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டிவைத்து, இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை(Site Museum) திறந்துவைத்தார்.
- ஆதிச்சநல்லூரில் இரு இடங்களில் அகழாய்வு நடைபெற்ற குழிகளுக்கு மேல் கண்ணாடித் தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த முக்கிய திட்டங்கள்/அறிவிப்புகள்
- 1969- இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது
- 1969- சட்டநாதன் தலைமையில் தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்தல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதத்திற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினை 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்திற்கும் உயர்த்துதல்
- 1969-இல் மத்திய - மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973-இல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார்.
- 1970- உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
- 1971- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
- 1971- பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்
- ஏப்ரல் 1971- மாநிலத் திட்டக்குழு
- 1971- கண்ணொளி வழங்கும் திட்டம்
- 1971- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி
- 1971- கோவையில் தமிழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது
- 1973- கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது
- 1974- பூம்புகார் கப்பல் வாணிபக் கழகம்
- 1975 - டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்
- 1976- மாநிலம் முழுவதும் பொது விநியோகத் திட்டம் அமல்படுத்துதல்
- 1989- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்
- 1989- மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு மற்றும் பழங்குடியினர் சமுதாயத்திற்குத் தனியாக 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது
- 1989- சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம்
- 1989- டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்
- 1989- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் (இந்தியாவிலேயே முதன் முறையாக வழங்கப்பட்டது)
- 1989- முதல் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக் கழகம் (ஆசியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்டது)
- 1989- மகளிர் சுயஉதவி குழுக்கள் தர்மபுரியில் தொடங்கப்பட்டது
- 1990- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது
- 1996- வரும் முன் காப்போம் திட்டம்
- 1996- சிற்றுந்து இயக்கும் திட்டம்
- 1996- மெட்ராஸ் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
- 1997- இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம்
- 1997- அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் (இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம்)
- 1998- மதுரை மேலக்கோட்டை கிராமத்தில் கருணாநிதி அவர்களால் பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்கப்பட்டது
- 1999- மதுரையில் உழவர் சந்தை முதன் முதலாக தொடங்கப்பட்டது
- 1999- டைடல் பார்க் நிறுவப்பட்டது
- 2000- கன்னியாகுமரியில் 133 அடி உயர் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது
- 2006- 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம்
- 2006- இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்
- 2006- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
- 2006- காமராஜர் பிறந்த தினம் (ஜூலை 15) எல்லா பள்ளிகளிலும் ‘கல்வி மேம்பாட்டு தினம்’ ஆக கொண்டாடப்பட தொடங்கியது
- 2008- தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினர் நல வாரியம்
- 2008 - 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம்
- 2009- அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு
- 2009- கலைஞர் காப்பீட்டு திட்டம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் LVM-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
- அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள ISRO-வின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அந்தவகையில் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிக்கப்பட்டு குறைந்தபட்சம் 236 கிமீ தொலைவும், அதிகபட்சம் 1,27,609 கிமீ தொலைவும் கொண்ட பாதையில் விண்கலம் பயணித்து வந்தது.
- மேலும் ஆகஸ்ட் 1 அன்று நள்ளிரவு 12.05 மணியளவில் விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈா்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- மிகவும் சிக்கலான இந்த பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சந்திரயான்-3 விண்கலம், நிலவின் ஈா்ப்பு விசைப்பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.
- இதன் தொடா்ச்சியாக வரும் 17 ஆம் தேதி உந்து கலனில் (Propulsion module) இருந்து லேண்டா் கலன் விடுவிக்கப்படும்.
- அதன் பின்னா் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தையொட்டிய பகுதியில் லேண்டா் கலன் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும். அதன் பின்னா் அதிலிருந்து ரோவா் கலன் வெளியேறி நிலவின் தரையில் பயணித்து ஆய்வுகளை நடத்தவுள்ளது.
- இந்நிலையில், சனிக்கிழமை(ஆகஸ்ட் 5) சந்திரனின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பிய முதல் புகைப்படத்தை ISRO பகிர்ந்துள்ளது.
விளையாட்டு செய்திகள் :-

- கனடாவில் நடந்து வரும் உலக காவல்துறை தடகளப் போட்டியில் கலந்து கொண்ட சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 5 ஆயிரம் மீட்டர் வேகநடை பிரிவில் 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார்.
- சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் உள்ள ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை முகாமில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
- கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் நடந்த உலக காவல் துறை தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 ஆயிரம் மீட்டர் வேகநடை பிரிவில் தங்கம் வென்றார். இதையடுத்து அவருக்கு 2019-ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
- அதேபோல் 2022-ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற உலக காவல் துறை தடகளப் போட்டியிலும் இதேபிரிவில் தங்கம் வென்றுள்ளார்
முக்கிய நாட்கள் :-

- தேசிய கைத்தறி தினம் ஆகஸ்டு 7 கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
- உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- முதல் தேசிய கைத்தறி தினம் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.
- நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது.
சுதேசி சிந்தனையின் பரிணாம வளர்ச்சி
- விடுதலைப் போராட்டத்தின்போது சுதேசி இயக்கம் என்ற எண்ணம் முதன்முதலாக 1905-இல் ஒரு சில காங்கிரஸ் தலைவர்களாலும்,பின்னர் 1920-களில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையிலும் ஒரு தத்துவமானது.
- 'சுதேசி' என்பதன் பொருள் 'ஒருவரது சொந்தநாடு' என்பதாகும்.
- இத்தத்துவத்தின் தோற்றமானது, 1872-இல் பூனாவில் மகாதேவ் கோவிந்த் ரானடே தனது தொடர் சொற்பொழிவுகளின் மூலம் இச்சிந்தனையைப் பிரபலப்படுத்தியதிலிருந்துத் தொடங்குகிறது.
- ரானடேயின் கருத்துப்படி, ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
- 1920-களில் காந்தியடிகள், இதை அனைத்து இந்தியர்களும் தாங்கள் பிறந்த நாட்டிற்குச் செய்யவேண்டிய கடமைகளோடு இணைத்துச் சுதேசி சிந்தனைக்குப் புதிய பொருளைக் கொடுத்தார்.
Tags:
Current Affairs