போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 27-06-2023
தேசியம் :-

- மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி காமலாபதி ரயில் நிலையத்தில் ஐந்து வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- மும்பை-கோவா, பெங்களூரு-ஹூப்ளி, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர் ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
- ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
- இந்த 5 ரயில்கள் இணைந்தால், நாட்டின் மொத்த வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும்.
முக்கிய குறிப்புகள்
- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-இல் அறிமுகம் செய்தது.
- வந்தே பாரத்தின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் பிப்ரவரி 15,2019-இல் தொடங்கப்பட்டது.
- இந்தியாவின் 14வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 8- ஆம் தேதி தொடங்கப்பட்டது.
- 2024 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு :-

- "தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டு வருகிறது" என்று “சிற்பி” திட்டத்தின் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- இவ்விழாவில் சிற்பி திட்டத்தில் பயிற்சி முடித்த 5,000 மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.
சிற்பி திட்டம் என்றால் என்ன?
- சிற்பி என்பதற்கு Students in Responsible Police Initiatives (SIRPI) என்பதுதான் பொருள்.
- இத்திட்டம் சென்னை காவல்துறையால் உருவாக்கப்பட்டது. இதனை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் வடிவமைத்தார்.
- இத்திட்டம் ரூ.4.25 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.9.2021 அன்று சட்டசபையில் அறிவித்தார்.
- இதனை செப்டம்பர் 14,2022-இல் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- காவல்துறையுடன் மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து அவர்களை சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயமாக மாற்றுவது; பயங்கரவாதம், வகுப்புவாதம், போதை பழக்கம், குடிப்பழக்கத்துக்கு எதிரான மாணவர்களாக உருவாக்குவது; இயற்கையை நேசித்து பாதுகாப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
- மொத்தத்தில் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் நோக்கமாகும்.
- இதற்காக சென்னையில் உள்ள 100 அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் தலா 50 மாணவர்கள் சுய விருப்பத்தின்படி தேர்வு செய்யப்பட்டனர்.
- இத்திட்டத்தின்கீழ்,ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒருங்கிணைப்பு அதிகாரி முன்னிலையில் சிற்பி மாணவ, மாணவிகள் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை போலீஸ் அதிகாரிகள், நிபுணர்கள் நடத்துவார்கள்.
- தற்போது சிற்பி திட்டத்தில் 100 பள்ளிகளில் இருந்து 8-ஆம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்கள், 2,236 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

- மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15-இல் திறந்து வைக்கிறார்.
- இதன் கட்டிடத்திற்காக ரூ.99 கோடியும், நூலகத்திற்கான புத்தகங்களை வாங்க ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க ரூ.5 கோடியும் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
- கலைஞர் நூலகத்திற்கு கீழ் தளம், தரை தளத்துடன் 6 தளங்களைக் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுரஅடி நிலப்பரப்பில் கட்டப்படுகிறது.
- இந்த நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 11-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கீழ் தளத்தில் வாகன நிறுத்தம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைகின்றன.
- தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஆகியவை அமைகின்றன.
- முதல் தளத்தில் கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம்,அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கிறது.
- 2-வது தளத்தில் தமிழ் நூல்கள்பிரிவு மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன.
- 3-வது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைக்கின்றன.
- 4-வது தளத்தில் சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைக்கிறது.
- 5-வது தளத்தில் அரிய நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 6-வது தளத்தில் ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல், நூலக நிர்வாகம், நூல்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகளும் அமைகின்றன.
- மேலும் நூலகத்தின் முன்பகுதியில் கருணாநிதியின் உருவச்சிலை அமைக்கப்படுகிறது.
இறப்பு :-

- லித்தியம்-அயன் பேட்டரியை வடிவமைத்து, தொழில்நுட்ப உலகில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் ஜான் குட்இனஃப். 100 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) காலமானார்.
- கடந்த 2019-ல் வேதியியல் துறையில் நோபல் பரிசை அவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்புகள்
- 1991-இல் சந்தையில் பயன்பாட்டுக்கு வந்தது லித்தியம் அயன் பேட்டரிகள். ஆனால், அதற்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேட்டரி உருவாக்கப்பட்டுவிட்டது.
- அந்த முயற்சியை முதலில் தொடங்கியவர் முனைவர் ஸ்டான்லி விட்டிங்கம். 1970-களின் தொடக்கத்திலேயே இந்த ஆராய்ச்சியில் முனைவர் ஸ்டான்லி விட்டிங்கம் இறங்கினார். முதல்முறையாக செயல்படக்கூடிய லித்தியம் பேட்டரியை வடிவமைத்தவர் இவர்தான்.
- அவரைத் தொடர்ந்து முனைவர் குட்இனஃப், லித்தியம் பேட்டரியின் அபரிமிதமான ஆற்றலை மென்மேலும் எப்படி பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்தார்.
முக்கிய நாட்கள் :-

- அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 27 ஆம் நாள் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவன(MSME) தினமாகக் கொண்டாடுகிறது.
- இத்தினம் 2017 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
- 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் - “Future-ready MSMEs for India@100."
Tags:
Current Affairs