இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 03-06-2023
தேசியம் :-

திட்டத்தின் பெயர் | பயன்கள் | அமலுக்கு வரும் தேதி |
க்ருஹ லக்ஷ்மி | இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 மாதந்தோறும் வழங்குதல் | ஆகஸ்ட் 15 |
அன்ன பாக்யா | வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் | ஜூலை 1 |
யுவாநிதி | வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும். 2022 - 2023 காலத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு இந்த திட்டத்தில் 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். | ஜூலை 15 |
க்ருஹ ஜோதி | 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் | ஜூலை 1 |
இது தவிர, பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11-ஆம் தேதி முதல் செயல்முறைக்கு வருகிறது.
தமிழ் நாடு :-

வாழ்க்கை குறிப்பு
- 1924 ஜூன் 3: நாகப்பட்டின் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
- 1938: நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.
- 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி.
- 1942: அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் கருணாநிதி எழுதிய 'இளமைப்பலி' என்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு அண்ணாவைப் பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக வந்திருந்த அவர், கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார்.
- 1944: பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன்’ நாடகத்தை அரங்கேற்றினார்.
- 1944 செப்டம்பர்: பத்மாவதி என்பவருடன் திருமணம் நடந்தது.
- 1946: முதல் திரைப்படமான ‘இராஜகுமாரி’-க்கு கதை வசனம் எழுதினார்.
- 1948 செப்டம்பர்: முதல் மனைவி மறைந்த நிலையில், தயாளு அம்மாளுடன் இரண்டாவது திருமணம்.
- 1949 செப்டம்பர் 18: திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் துவங்கப்படுகிறது. அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கருணாநிதி திமுகவின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- 1950: கருணாநிதி கதை-வசனம் எழுதிய, எம்.ஜி. ஆர். நடித்த "மந்திரிகுமாரி" திரைப்படம் வெளியானது.
- 1951: பத்திரிக்கைத்துறையில் ‘மாலைமணி’ இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
- 1952: கருணாநிதிக்கு புகழ் தேடித் தந்த, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய `பராசக்தி` படம் வெளியானது.
- 1953 ஜூலை 14, 15: "டால்மியா" புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும், குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.
- 1957: குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் மு. கருணாநிதி. இதற்குப் பிறகு போட்டியிட்ட எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.
- 1959: சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 100-க்கு 45 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, மாநகராட்சியைக் கைப்பற்றியது.
- 1961: திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
- 1962: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கருணாநிதி.
- 1963: திமுக நடத்திய அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற மு. கருணாநிதிக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை.
- 1965 பிப்ரவரி 16: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பிறகு ஏப்ரல் 15-ஆம் தேதி விடுதலையானார்.
- 1967: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
- 1969 பிப்ரவரி 10: அண்ணாவின் மறைவுக்குப் பின், தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார் கருணாநிதி.
- 1971 மார்ச் 15: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.
- 1972 அக்டோபர் 14: திமுக-வில் இருந்து எம்.ஜி. ராமச்சந்திரன் நீக்கப்பட்டார்.
- 1974 ஆகஸ்ட் 15: மு. கருணாநிதியின் கோரிக்கையின் பேரில், முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் கருணாநிதி. சென்னை கோட்டையில் தேசியக்கொடியே ஏற்றிய முதல் முதல்வர் எனும் பெருமையைப் பெற்றார்.
- 1976 ஜனவரி 31: கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது.
- 1986: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, ஈழத் தமிழர் ஆதரவு அமைப்பின் (டெசோ) மாநாட்டை நடத்தினார் கருணாநிதி.
- 1988: வி.பி. சிங்கை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்ட தேசிய முன்னணியில் இணைந்து, மத்திய கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றது.
- 1989: எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 3-ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.
- 1991 ஜனவரி 30: திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
- 1996: சட்டமன்ற தேர்தலில் வென்று, 4-ஆவது முறையாக தமிழக முதல்வராக கருணாநிதி பதவியேற்றார்.
- 2001 ஜூன் 30: சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தது தமிழகக் காவல்துறை. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- 2006: சட்டமன்ற தேர்தலில், 5-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் கருணாநிதி.
- 2008-2009: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இந்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை அளிக்கவில்லை என கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
- 2010 மார்ச்: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் - சட்டமன்ற கட்டடத்தை, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
- 2010 ஜூன்: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தினார் கருணாநிதி.
- 2011: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது திமுக.
- 2013: தனக்குப் பிறகு, தனது அரசியல் வாரிசாக தனது மகனும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இருப்பார் என அறிவித்தார் கருணாநிதி.
- 2014-16: 2014-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2016-இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தோல்வியடைந்தது.
- 2016, மே 19: திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று 13 முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
- 2016 அக்டோபர் 25: கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக உறுதிப்படுத்தியது.
- 2016 டிசம்பர் 1: உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 7ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
- 2017 டிசம்பர் 16: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.
- 2018 ஜூலை 27: நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.
- 2018 ஆகஸ்ட் 7: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு. கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.
- 2018 ஆகஸ்ட் 8: 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுகவின் தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது
தமிழகத்தில் கருணாநிதி கொண்டுவந்த முக்கிய திட்டங்கள்/அறிவிப்புகள்
- இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது(1969).
- சட்டநாதன் தலைமையில் தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்தல்(1969) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதத்திற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினை 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்திற்கும் உயர்த்துதல்
- 1969-இல் மத்திய - மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973-இல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார்.
- உலக தமிழாராய்ச்சி நிறுவனம்(1970)
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்(1971)
- பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் (1971)
- மாநிலத் திட்டக்குழு(ஏப்ரல் 1971)
- கண்ணொளி வழங்கும் திட்டம்(1971)
- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி(1971)
- கோவையில் தமிழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது(1971)
- கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது(1973)
- பூம்புகார் கப்பல் வாணிபக் கழகம் (1974)
- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்(1975)
- மாநிலம் முழுவதும் பொது விநியோகத் திட்டம் அமல்படுத்துதல்(1976)
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்(1989)
- மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு மற்றும் பழங்குடியினர் சமுதாயத்திற்குத் தனியாக 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது(1989)
- சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம்(1989)
- டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்(1989)
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – இந்தியாவிலேயே முதன் முறையாக வழங்கப்பட்டது (1989)
- முதல் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக் கழகம் – ஆசியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்டது (1989).
- மகளிர் சுயஉதவி குழுக்கள் தர்மபுரியில் தொடங்கப்பட்டது(1989)
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1990)
- வரும் முன் காப்போம் திட்டம்(1996)
- சிற்றுந்து இயக்கும் திட்டம்(1996)
- மெட்ராஸ் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1996)
- இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம்(1997)
- அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்(1997)- இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம்
- மதுரை மேலக்கோட்டை கிராமத்தில் கருணாநிதி அவர்களால் பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்கப்பட்டது(1998)
- மதுரையில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது(1999)
- டைடல் பார்க் நிறுவப்பட்டது (1999)
- கன்னியாகுமரியில் 133 அடி உயர் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது (2000)
- 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம் (2006)
- இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம் (2006)
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்(2006)
- காமராஜர் பிறந்த தினம் (ஜூலை 15) எல்லா பள்ளிகளிலும் ‘கல்வி மேம்பாட்டு தினம்’ ஆக கொண்டாடப்பட தொடங்கியது(2006)
- தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினர் நல வாரியம்(2008)
- 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் (2008)
- அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு(2009)
- கலைஞர் காப்பீட்டு திட்டம்(2009)
சிறப்புகள்
- 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.
- 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
- இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.
- சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
- 1957-லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
- 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.
- மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார்.
- எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.
- 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.
கருணாநிதி எழுதிய நாடகங்கள்
- சிலப்பதிகாரம், மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்குமேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதய சூரியன், நச்சுக்கோப்பை.
கருணாநிதி எழுதிய புத்தகங்கள்
- குறளோவியம்,நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பிய உரை, சங்கத்தமிழ், பாயும் புலி பண்டாரக வன்னியன், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், வெள்ளிக்கிழமை, இனியவை இருபது, பொன்னர் சங்கர், திருக்குறள் உரை, மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று.
நினைவு சின்னம்
- முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

- கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகின்றன.
- இதில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி. மரிய அக் ஷிதா தங்கம் வென்றார்.
- பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணிக்காக பங்கேற்ற மரிய அக் ஷிதா இறுதிப் போட்டியில் குஜராத்தின் குஷி சமேஜாவை 15-7 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

- உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்ய வாழ்வுக்காகவும், உடல்நல முன்னேற்றத்திற்காகவும் சைக்கிள் ஓட்டுதலின் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், உலக சைக்கிள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
- இத்தினம் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்படுத்தப்பட்டது.
- 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “Riding Together for a Sustainable Future.”