போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 14-08-2023
தேசியம் :-

1947 ஆகஸ்ட், 15-ஆம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்கு வழங்கிய சுதந்திரம் முழுமையானது அல்ல. ஏனெனில், சுதந்திரம் பெற்ற போது, ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல், நாட்டின் தலைவராக இருந்தார். பின்னர் 1949 நவம்பர் 26-இல் இந்திய அரசியலமைப்பு, இந்திய அரசியல் நிர்ணய சபையால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26-இல் நடைமுறைக்கு வந்தது. அந்த தினமே குடியரசு தினம்!
கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள்
வித்தியாசம் 1:
- சுதந்திர தினம்: கொடிக்கயிற்றை கீழிருந்து மேல் நோக்கி இழுத்து, பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவே கொடி இவ்வாறு ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்வானது "கொடியேற்றம்" (Flag hoisting) என அழைக்கப்படுகிறது.
- குடியரசு தினம்: கொடியானது முன்னரே கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். பின்னர் முடிச்சு அவிழ்க்கப்பட்டு, கொடி பறக்கவிடப்படும். இதனை "கொடியை பறக்கவிடுதல்" (flag unfurling) என அழைக்கப்படுகிறது.
வித்தியாசம் 2:
- சுதந்திர தினம்: சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமலுக்கு வரவில்லை. அதனால் அப்போது பிரதமர்தான் நாட்டில் முதல் மனிதராக (political head) கருதப்பட்டார். குடியரசுத் தலைவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தன்று பிரதமரே தேசியக் கொடி ஏற்றுகிறார்.
- குடியரசு தினம்: குடியரசு தினத்தன்று அரசியல், சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவரே தேசியக் கொடியை பறக்கவிடுவார்.
வித்தியாசம் 3:
- சுதந்திர தினம்: தேசியக்கொடியானது பிரதமரால் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்படும்.
- குடியரசு தினம்: குடியரசுத் தலைவரால் டெல்லி கர்த்தவ்யா பாத்தில் (கடமை பாதை) பறக்கவிடப்படும்.

- மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு அடையாறு காவல் துணை ஆணையர் ஆர்.பொன்கார்த்திக் குமார், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் எஸ்.ஜான்விக்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார், 2018-ல் சேலம்மாவட்டம் ஆத்தூர் உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தபோது, 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலைசெய்த வழக்கில் திறமையாக புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியைக் கைது செய்துள்ளார். மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளார்.
- உதவி ஆணையர் ஜான் விக்டர், 2015-ல் சிபிசிஐடி கடத்தல்தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது, பெரவள்ளூர் காவல் நிலைய எல்லையில், 16 வயது சிறுமி காணாமல்போன வழக்கை திறம்பட விசாரணை செய்து, காணாமல்போன சிறுமியை ஒரே நாளில் கண்டுபிடித்து, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.

- தில்லி நிா்வாக திருத்த மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்டமாகியுள்ளது.
குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்களின் பட்டியல்
- தில்லி நிர்வாக திருத்த மசோதா
- எண்ம தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா
- பிறப்பு & இறப்பு சட்டத்திருத்த மசோதா
- நன்னம்பிக்கை (ஜன் விஸ்வாஸ்) சட்டப்பிரிவுகள் திருத்த மசோதா
- இந்திய கல்வி மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா
- தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா
- கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று) திருத்த மசோதா

- தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் .
- சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதலிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம், 2-ஆம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ஆம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
- பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வழங்கப்படும்.
- சாலை வசதிகள், குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை, மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் என 13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்படும்.
சிறந்த மாநகராட்சி
- திருச்சி
- தாம்பரம்
சிறந்த நகராட்சி
- ராமேஸ்வரம்
- திருப்புறைப்பூண்டி
- மன்னார்குடி
சிறந்த பேருராட்சி
- விக்கிரவாண்டி
- ஆலங்குடி
- வீரக்கால்புதூர்

- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் விருது மற்றும் பரிசுத் தொகை 7.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
- மாவட்ட விருதுடன், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு, மாநில அளவில் ‘முன்மாதிரி கிராம விருது’ மற்றும் ரூ.15 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
2021-22 ஆண்டுக்கான விருதுகள்
- குளூர் கிராம ஊராட்சி, ஈரோடு
- நி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி, திண்டுக்கல்
- நட்டாத்தி கிராம ஊராட்சி, தூத்துக்குடி
2022-23 ஆண்டுக்கான விருதுகள்
- நாயக்கன்பாளையம் கிராம ஊராட்சி, கோயம்புத்தூர்
- மேல்மருவத்தூர் கிராம ஊராட்சி, செங்கல்பட்டு
- அரியனேந்தல் கிராம ஊராட்சி, ராமநாதபுரம்

- பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் பெறுவோரின் விவரம்:
- க. வெங்கடராமன்- கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
- அஸ்ரா கர்க்- காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சென்னை பெருநகர காவல்.
- சு. ராஜேந்திரன்- காவல்துறை துணைத் தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை.
- ப.ஹீ. ஷாஜிதா - காவல் கூடுதல் துணை ஆணையாளர், இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.
- ஹா. கிருஷ்ணமூர்த்தி -காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள் 2023-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.
காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் பெறுவோரின் விவரம்:
- வே. அனில் குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம்.
- கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம்.
- ர. மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம்.
- மா. அமுதா, காவல் ஆய்வாளர், பீலமேடு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம்.
- ம. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.
- இரா. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்
- ஆ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.
- அ. சித்திராதேவி, காவல் ஆய்வாளர், இணைய குற்றப்பிரிவு, திருப்பூர் மாவட்டம்.
- ந. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
- மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, திருச்சிராப்பள்ளி.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

- சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் - கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யேக பிரிவு அமைத்து சிகிச்சை அளித்ததற்காக
- கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் - பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக
- கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் - நாகை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது மகப்பேறு இறப்புகளை குறைத்தது மற்றும் குழந்தை பிறப்பு விகிதத்தை மேம்படுத்தியமைக்காக
- கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் - இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும் திட்டத்துக்காக
- மேலும்,முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலி, மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணித்ததற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கும் நல்லலாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதுகளை சுதந்திர தினத்தன்று ரூ.2 லட்சம் பரிசுத் தொகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

- சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல், சட்டவிரோத செயல்பாடுகளை ஒடுக்குதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 6 காவலர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட உள்ளது. அவர்களின் விவரங்கள்,
- அஸ்ரா கார்க், ஐபிஎஸ், சென்னை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு(வடக்கு) கூடுதல் ஆணையர்.
- வி. பத்ரிநாராயணன் ஐபிஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
- டோங்கரே பிரவின் உமேஷ், ஐபிஎஸ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
- எம். குணசேகரன், சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல் துணை கண்காணிப்பாளர்.
- எஸ். முருகன், நாமக்கல் மாவட்ட காவல் துணை ஆய்வாளர்.
- ஆர். குமார், நாமக்கல் மாவட்ட கிரேடு 1 பிசி 1380.

- 7-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
- 6 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - மலேசியா மோதின.
- இதில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும்.
- 2011, 2016-இல் கோப்பையை வென்ற இந்திய அணி 2018-ஆம் ஆண்டு தொடரில் பாகிஸ்தானுடன் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டது.