அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 (புதுமை பெண் திட்டம்) விண்ணப்பிப்பது எப்படி ?
அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதில் பதிவு செய்திருந்த மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மாதம் தோறும் ரூ 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.