போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 14-06-2023
தேசியம் :-

- சீன எல்லையில் NHPC சார்பில் கட்டப்பட்டு வரும் சுபன்சிரி மெகா நீர்மின் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூலையில் தொடங்கவுள்ளது.
- இதுகுறித்து நிதி இயக்குநர் ராஜேந்திர பிரசாத் கோயல் கூறுகையில், “சுபன்சிரி மெகா நீர்மின் திட்டத்தின் முதல் பிரிவு டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 இறுதிக்குள் அதன் 8 அலகுகளும் இயக்கப்படும்" என்றார்.
- 2 ஜிகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம் கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கியது.
- இந்த திட்டத்துக்கான செலவு - ரூ.21,413 கோடி.

- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னைக்கான முதல் காலநிலை செயல் திட்ட கையேட்டினை வெளியிட்டார்.
- இத்திட்டம், 2050-ஆம் ஆண்டிற்குள் சென்னை மாநகரம் கார்பன் சமன்பாட்டை எட்டுவதற்கும், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு நோக்கமான 2070 ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்கும் இலக்கை எட்டுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- சென்னை காலநிலை செயல் திட்டமானது, C40 நகரங்கள் ஆதரவுடன், அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
- இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மாசினை குறைத்து, காலநிலை சவால்களை எதிர்கொள்ளவும், மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.
இத்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்படும் 6 பகுதிகள்
- மின் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Electrical grid and renewable energy)
- வணிக கட்டடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை கட்டமைத்தல் (Building energy)
- நிலையான போக்குவரத்து (Sustainable transport):
- திடக்கழிவு மேலாண்மை (Solid waste management):
- நகர்ப்புற வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை (Urban flooding and water scarcity)
- பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினர் மற்றும் சுகாதாரம் (Vulnerable populations and health)

- மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத் தலைவராக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சீமா சின்ஹாவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
- மதுரையில், மதுரை உட்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த வங்கிக் கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கடன் வசூல் தீர்ப்பாயம் (Debt Recovery Tribunal- DRT) உள்ளது.
- மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த தீர்ப்பாயத்துக்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை தலைவராக மத்திய அரசு நியமிக்கும்.
கடன் வசூல் தீர்ப்பாயம் (Debt Recovery Tribunal- DRT) பற்றிய குறிப்புகள்
- கடன் வசூல் மற்றும் திவால் சட்டம் 1993 (Debts of Recovery and Bankruptcy Act)- இன் படி கடன் வசூல் தீர்ப்பாயம் (Debt Recovery Tribunal) மற்றும் கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Debt Recovery Appellate Tribunal) போன்றவை அமைக்கப்பட்டது.
- வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன் வாராக்கடனாக ஆகும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்க இந்த தீர்ப்பாயம் நிறுவப்பட்டுள்ளது.
- தற்போது இந்தியாவில் 39 கடன் வசூல் தீர்ப்பாயங்களும் மற்றும் 5 கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களும் உள்ளது.
- மதுரையில் கடன் வசூல் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 2007

- ஜூன் 14-ஆம் தேதி உலக இரத்ததான தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.
- இந்தாண்டிற்கான கருப்பொருள் : ‘இரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், உயிரைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்’.
- 2023-ஆம் ஆண்டு உலக இரத்த தான தினத்தை நடத்தும் நாடு – அல்ஜீரியா
உலக ரத்ததான தின வரலாறு
- உலக இரத்ததான தினம் 2004-ஆம் ஆண்டு முதன் முதலில் உலக சுகாதார நிறுவனத்தால் முன்மொழியப்பட்டது.
- பின்னர், 2005-ஆம் ஆண்டு 58வது உலக சுகாதார மாநாட்டில் உலக அளவில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அறிவிக்கப்பட்டது.
- ஜூன் 14ஆம் தேதி என்பது ஆஸ்திரிய உயிரியலாளர் கார்ல் லேண்ட்ஸ்டீனரின் பிறந்த தினம். இவர் நவீன இரத்த மாற்று நடைமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இரத்த வகை பிரிவுகளை உருவாக்கியதற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இரத்த வகைகள் - முக்கிய குறிப்புகள்
- காரல் லேண்ட்ஸ்டீனர் (1900) இரத்த வகைகளைக்(A, B மற்றும் O) கண்டறிந்தார்.
- டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி (1902) AB இரத்த வகையினை கண்டறிந்தனர்.
- மனித இரத்தத்தில் சில தனிச் சிறப்பு வாய்ந்த அக்ளுட்டினோஜென் அல்லது ஆன்டிஜென் (Ag) மற்றும் அக்ளுட்டினின் (அ) எதிர்ப்பொருள்கள் (ஆன்ட்டிபாடிகள்) காணப்படுகின்றன. ஆன்டிஜென்கள் RBC-யின் மேற்புற படலத்தில் காணப்படுகின்றன.
- எதிர்ப்பொருட்கள் இரத்த பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. ஆன்டிஜென் மற்றும் (ஆன்டிபாடி) எதிர்ப்பொருள்கள் காணப்படுவதின் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைககளாக அறியலாம். இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.
அட்டவணை - பல்வேறு வகையான இரத்த வகைகளில் காணப்படக்கூடிய ஆன்டிஜென் (RBC) மற்றும் ஆன்டிபாடிகள் (பிளாஸ்மா)
இரத்த வகை
| RBC – யின் ஆன்டிஜென்
| பிளாஸ்மாவின் ஆன்டிபாடி
| எந்த இரத்தவகைக்கு வழங்கலாம் | எந்த இரத்தவகையை பெறலாம் |
A | ஆன்டிஜென் A | ஆன்டி-B | A மற்றும் AB | A மற்றும் O |
B | ஆன்டிஜென் B | ஆன்டி-A | B மற்றும் AB | B மற்றும் O |
AB | ஆன்டிஜென் A&B | ஆன்டிபாடி இல்லை
| AB
| A, B, AB, மற்றும் O (Universal recipient) |
O | ஆன்டிஜென் இல்லை
| ஆன்டி A & B உள்ளது
| A, B, AB, O (Universal donor) | O மட்டும் |
Rh காரணி
- 1940 ஆம் ஆண்டு லேண்ட்ஸ்டீனர் மற்றும் வியன்னர் ஆகியொரால் ரீசஸ் இனக்குரங்கு இரத்தத்தில் இருந்து Rh காரணியை கண்டறிந்தனர்
- Rh நேர்வகை (Rh+) இரத்தத்தை உடையோர் அவர்களது இரத்த சிவப்பணுக்களின் மீது Rh ஆன்டிஜென்களை கொண்டிருந்தனர்
- Rh எதிர்வகை (Rh-) இரத்தம் உடையோர் இதனை பெற்றிருக்கவில்லை.
- Rh ஆன்டிஜென்களுக்கு எதிராக உருவாகும் ஆன்டிபாடிகாள் Rh ஆன்டிபாடிகாள் எனப்படும்.
யார் இரத்த தானம் செய்யலாம்?
,
- இந்தியாவில் இரத்த தானம் செய்ய 18 முதல் 65 வயதுடையவராக இருக்க வேண்டும். ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.
- இரத்த தானம் செய்ய உங்கள் எடை 45கிலோவிற்கு குறைவாக இருக்கக்கூடாது. அதேபோல உங்கள் ரத்த ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறைவாக இருக்கக் கூடாது.
யார் இரத்த தானம் செய்ய முடியாது?
- எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்
- மூன்று மாதத்திற்கு முன் மலேரியாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள்
- புற்றுநோய் பாதித்தவர்கள், இதய நோய் உள்ளவர்கள்
- காலரா, டைபாய்டு, ப்ளேக் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 15 நாட்களுக்கு இரத்த தானம் செய்யக்கூடாது.
- ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் ஓராண்டுக்கு இரத்த தானம் செய்யக் கூடாது.
- உடலில் பச்சை குத்தியவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு இரத்த தானம் செய்யக் கூடாது.
- பல் மருத்துவ சிகிச்சை எடுக்கும் போது அடுத்த 24 மணி நேரத்திற்கு இரத்த தானம் செய்யக் கூடாது.
இரத்த தானத்தின் பயன்கள்
- இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
- தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வது மாரடைப்பை தடுக்கிறது.
- இரத்த தானம் செய்வது உடலில் புதிய ரத்த செல்கள் உருவாவதை வேகப்படுத்துகிறது.

- இந்திய ராணுவம் மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான “ஈகுவெரின்” என்ற கூட்டு ராணுவப் பயிற்சியின் 12வது பதிப்பானது ஜூன்11, 2023 அன்று தொடங்கியுள்ளது.
- இந்த கூட்டு ராணுவப் பயிற்சியானது ஜூன் 11 முதல் 24 வரை உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சௌபதியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈகுவெரின் என்பது மாலத்தீவு மொழியில் “நண்பர்கள்” என்ற பொருளைக் கொண்டது.