போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 10-07-2023
தமிழ்நாடு :-

- சங்ககால வாழ்விடப் பகுதியாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறையின் மூலம் கடந்த 2 மாதங்களாக இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
- இதுவரையில் தலா சுமார் 15 அடி நீள, அகலத்தில் 8 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. அதில், ஒரு குழியில் 133 செ.மீட்டர் ஆழத்தில் 6 இதழ் கொண்ட தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- 26 மில்லி கிராம் எடையுள்ள இந்த அணிகலனை மூக்குத்தி அல்லது தோடாக பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.
- இது சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
- இதுவரையிலான அகழாய்வில் இதுவே முதல் முறையாக கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணமாகும்.

- 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை தீவிரமாக எதிர்த்தவர் திப்பு சுல்தான்.
- நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டதும்(1799) அவரது குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டனர்.
- திப்புவின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்கள், குறுநில மன்னர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் செயல்பட விரும்பாமல் பிரிட்டிஷ் படையை எதிர்த்தனர். திப்புவின் மகன்களுக்கு ஆதரவு தந்தனர்.
- இதனால் திப்புசுல்தானின் வாரிசுகளும், உறவினர்களும் மைசூர் அரண்மனையில் இருந்து வேலூரில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பான கோட்டையில் வீட்டுச்சிறை வைக்கப்பட்டனர்.திப்பு குடும்பத்துக்கான பாதுகாப்பு அதிகாரி என்கிற பெயரில் சிறை அதிகாரியாக லெப்டினெண்ட் கர்னல் மேரியேட் இருந்தார்.
- கோட்டையை வெள்ளைக்கார சிப்பாய்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்ட இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். இந்தியச் சிப்பாய்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடங்குவர்.
- பிரிட்டிஷாரின் இராணுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றியவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பது ஆகியவற்றை நினைத்து கடுமையான கோபத்துடனே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
- இதனை வெளியே இருந்த திப்புசுல்தானின் ஆதரவு குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர். பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலை போராட்டத்தை வேலூர் கோட்டையிலிருந்து தொடங்கலாம் என முடிவு செய்தனர்.
உடனடி காரணம்
- துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கான ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். அது பிரபலமாக 'அக்னியூ தலைப்பாகை' என அழைக்கப்பட்டது.
- அது மாட்டுத் தோலால் செய்யப்பட்டு, மாட்டுக்கொழுப்பு பூசப்பட்டது என்று இந்து சிப்பாய்களும் பன்றித் தோலால் செய்யப்பட்டது என்று முஸ்லிம் சிப்பாய்களும் அந்த ஆணைக்குக் கட்டுப்பட மறுத்தனர்.
- அத்துடன் வீரர்கள் நெற்றியில் விபூதி, நாமம் தரிக்கக் கூடாது, மீசையை ஒரே அளவாக வெட்டிக்கொள்ள வேண்டும், தாடி வளர்க்காமல் ஒட்ட மழிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
- தங்களைக் கிறிஸ்துவ மதத்தில் மாற்றவே இந்த முயற்சிகள் என்று சிப்பாய்கள் கருதினர்.
- முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது. வேலூரிலிருந்த 4-ஆம் ரெஜிமெண்ட்டின் 2-ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர்.
- தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காகப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களில் 10 முஸ்லீம்களும் 11 இந்துக்களும் இருந்தார்கள்.
- நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு இரு வீரர் (ஒரு முஸ்லீம், ஒரு இந்து) தலா 900 கசையடிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
- புதிய தலைப்பாகையை அணிவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று இந்திய சிப்பாய்கள் போதுமான முன்னெச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கம்பெனி நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.
ஜமாலுதீனின் பங்கு
- வேலூர் புரட்சியில் முக்கியப்பங்கு வகித்ததாகக் கருதப்படுபவர் ஜமாலுதீன் ஆவார். இவர் திப்புக் குடும்பத்தின் 12 இளவரசர்களில் ஒருவர். அவர் இந்திய அதிகாரிகளிடமும் வீரர்களிடமும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின்போது, அவர்கள் வேலூர் கோட்டையை எட்டு நாட்களுக்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியும் அதற்குள் 10 ஆயிரம் ஆதரவாளர்கள் உதவிக்கு வந்து விடுவார்கள் என்றும் கூறி வந்தார்.
- உரிமை பறிக்கப்பட்ட பாளையக்காரர்களின் உதவியைக் கேட்டு அவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார்.
- திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த ஏராளமான அதிகாரிகள் திப்புவின் முன்னாள் அமைச்சரான பூர்ணையாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் தக்க நேரத்தில் கைகொடுப்பார்கள் என்றும் ஜமாலுதீன் கூறினார்.
புரட்சி வெடித்தது
- 1806 ஜூலை 10 அன்று அதிகாலையிலேயே முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்.
- பதில் நடவடிக்கையில் இறங்கும் முன்னரே,சிப்பாய்கள் ஆங்கிலேயப் பாதுகாவலர்கள் மீதும், படைவீரர் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவற்றின் மீதும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுத்தனர்.
- கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர்தான் முதல் பலியானார்.
- அடுத்ததாக இருபத்தி மூன்றாம் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார். கோட்டையைக் கடந்து சென்றுகொண்டிருந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிகளின் முழக்கத்தைக் கேட்டார். சூழலை விசாரித்தறிய முற்பட்ட அவரது உடல் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது.
- ஏறத்தாழ பனிரெண்டுக்கும் அதிகமான அதிகாரிகள் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள்.
- அவர்களில் லெப்டினென்ட் எல்லியும், லெப்டினென்ட் பாப்ஹாமும் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் (Battalion) சேர்ந்தவர்களாவர்.
- கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு கோட்டைக்குள் நுழைய முயன்றார். அவரால் உள்ளே செல்ல முடியாததால், ஆற்காட்டில்
- குதிரைப்படை முகாமுக்குப் பொறுப்பு வகித்த கில்லஸ்பிக்குக் கடிதம் எழுதி, அதைக் கேப்டன் ஸ்டீவன்சன் என்பவரிடம் கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதம் வேலூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருந்த ஆற்காட்டுக்குக் காலை 6 மணி அளவில் சென்றடைந்தது.
கலகம் அடக்கப்படுதல்
- கேப்டன் யங்கின் தலைமையிலான குதிரைப் படைப்பிரிவுடன் காலை 9 மணியளவில் கர்னல் கில்லஸ்பி கோட்டையை வந்தடைந்தார்.
- இதற்கிடையே புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பிரகடனம் செய்து மைசூர்சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர். போர்விதிமுறைகள் எதையும் பொருட்படுத்தாத கில்லஸ்பி வீரர்களின் புரட்சியை வன்மையாக ஒடுக்கினார்.
- நேரில் கண்ட ஒருவரின் வாக்குமூலப்படி, கோட்டையில் மட்டும் எண்ணூறு வீரர்கள் பிணமாகக் கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை 15 நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
கலகத்தின் விளைவுகள்
- புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.
- திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
- கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்தொகையும் பதவிஉயர்வும் வழங்கப்பட்டது.
- கர்னல் கில்லஸ்பிக்கு 7,000 பகோடாக்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டது.
- தலைமைத் தளபதி ஜான் கிரடாக்கும், உதவித் தளபதி (Adjutant General) அக்னியூவும், ஆளுநர் வில்லியம் பெண்டிங்கும் புரட்சி நடக்கக் காரணமானவர்கள் என்று கருதப்பட்டு அவர்களைப் பணிநீக்கம் செய்ததோடு, அவர்கள் இங்கிலாந்துக்கு திருப்பியழைத்துக் கொள்ளப்பட்டார்கள்.
- புதிய ஆளுநராக சர் ஜார்ஜ் பார்லோ நியமிக்கப்பட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக இதுவரை இஸ்ரோ SLV-3, ASLV, PSLV, GSLV, LVM-3, SSLV ஆகிய 6 வகை ராக்கெட்டுகளை உருவாக்கியுள்ளது.
- அதில் SLV-3, ASLV ஆகியவற்றுக்கு ஏற்கெனவே ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது.மற்ற ராக்கெட்டுகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
- முக்கியமாக, PSLV ராக்கெட் மூலமாக மட்டும் 54 முறை பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) PSLV ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், GSLV ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடையும் கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
- குறைவான எடை(500 கிலோ வரை) கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு உருவாக்கப்பட்ட SSLV-இன் முதல் பயணம்(2022 ஆகஸ்ட்) தோல்வி அடைந்தது.
- பின்னர் 2023 ஆண்டு பிப்ரவரியில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, EOS-07 செயற்கைக்கோள், பள்ளி மாணவா்களால் உருவாக்கப்பட்ட ஆசாதிசாட்-2 செயற்கைக்கோள், அமெரிக்க நிறுவனத்தின் ஜானஸ்-1 செயற்கைக்கோள் ஆகியவற்றை SSLV வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.
- 10 முதல் 100 கிலோ வரை எடை கொண்ட நானோ, மைக்ரோ அளவிலான செயற்கைக்கோள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் SSLV செயல்பட்டு வருகிறது.
- இந்நிலையில், SSLV ராக்கெட்டை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதன் தயாரிப்பு மட்டுமல்லாமல், அதன் செயல்பாடு உள்ளிட்டவற்றை நிா்வகிக்கும் பொறுப்பையும் தனியாரிடம் வழங்கவுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- இந்தியாவின் விண்வெளி ஆய்வு 1920 களில் "சிசிர் குமார் மித்ரா' என்பவரால் தொடங்கியது.
- அதன்பின் சர்.சி.வி.ராமன், மேக்நாத் சாகா போன்றோர் தனிப்பட்ட முறையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1945 - க்குப் பிறகு இம்முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு மையங்கள் சில தொடங்கப்பட்டது. இந்த ஆய்வுகளுக்கு "விக்ரம் சாராபாய்' அவர்களும், "ஹோமி ஜஹாங்கீர் பாபா' அவர்களும் முன்னிருந்து வழி நடத்தினார்கள்.
- அதன்பின் 1962 - இல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஆதரவுடன் விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கான குழு (NATIONAL COMMITTEE FOR SPACE RESEARCH - INCOSPAR) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
- பின்னர் இந்த அமைப்பு மேம்படுத்தப்பட்டு 1969-இல் ISRO உருவானது.
- இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை முன்னெடுத்துச் சென்ற டாக்டர்.விக்ரம் சாராபாய் "இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை' எனப் புகழப்படுகிறார்
- இஸ்ரோவின் தலைமையகம் பெங்களூருவில் அமைந்துள்ளது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்றுசிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலராக மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் தற்போது, சென்னை ராஜீவ்காந்திஅரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநரக செயலாற்றி வருகிறார்.
முக்கிய குறிப்புகள்
- தமிழ்நாட்டில் Transplant Authority of Tamil Nadu(TRANSTAN) என்ற அமைப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைக் கட்டுப்படுத்துகிறது.
- 1994-இல் Transplantation of Human Organs Act என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிய பிறகு, இறந்தவர் உடலில் இருந்து உறுப்புகளை தானமாகப் பெற்று முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1995-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டது.
- இதனை தொடர்ந்து தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை 2008-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதி தொடக்கி வைத்தாா்.
- இதனை ஒழுங்குபடுத்த 2015-இல் Transplant Authority of Tamil Nadu உருவாக்கப்பட்டது.
- 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான ‘விடியல்’ என்னும் முழு தானியங்கி செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
- உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்திலுள்ள மாநிலம் - தமிழ்நாடு
- தமிழகத்தில் 2008 முதல் தற்போது வரை 10003 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :-

- அயர்லாந்தின் லிமெரிக் நகரில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 21 வயதுக்கு உட்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷ் இறுதி சுற்றில் சுலோவேனியாவின் அல்ஜாஸ் பிரெங்குடன் மோதி 147-141 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
- முன்னதாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அதிதி தங்கம் வென்றார்.
- இந்த தொடரில் இதுவரை இந்தியா 5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்றுள்ளது.
முக்கிய நாட்கள்:-

- தேசிய மீன் விவசாயிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
- ஜூலை 10, 1957 அன்று, இந்திய முக்கிய மீன் வகைகளின் இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் டாக்டர் கே எச் அலிகுன்ஹி மற்றும் டாக்டர் எச்.எல். சவுத்ரி ஆகியோரின் நினைவாக ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- நாட்டின் மீன்பிடித் துறையின் மேம்பாட்டிற்கு மீன் வளர்ப்பாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, கூட்டாகச் சிந்தித்து, நீடித்து நிலைத்திருப்பதற்கான வழிகளை விவாதிப்பதற்கான சூழலை உருவாக்குவதே இந்நாளைக் கொண்டாடுவதன் நோக்கமாகும்.
- 2020 ஆம் ஆண்டில் பிரதமர், மீனவர்கள் நலனுக்கான பிரதமரின் மத்ஸய சம்பதா திட்டத்தை அறிவித்தார்.
Tags:
Current Affairs