இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 06-06-2023
தேசியம் :-

- அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ஆம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை.
- இத்தகைய கவுரவம், இதற்கு முன்பு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட வெகு சில உலகத் தலைவர்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது.
- அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான தனது தொலைநோக்குப் பார்வை, இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முன்னதாக, கடந்த 2016-ஆம்ஆண்டு அமெரிக்கா சென்றபோது அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
- பிரதமர் மோடிக்கு முன்பு, மன்மோகன் சிங் (2005), ஏ.பி. வாஜ்பாய் (2000), பி.வி.நரசிம்ம ராவ் (1994), ராஜீவ் காந்தி (1985) ஆகிய இந்தியப் பிரதமர்கள், அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தியுள்ளனர்.

- புவி வெப்பமயமாதலுக்கு காரணமான காரியமில வாயு வெளியேற்றத்தை 2070-க்குள் பூஜ்ஜிய நிலைக்கு குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- இந்த சூழ்நிலையில், டாடா குழுமத்தின் டாடா அகரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொலூஷன்ஸ் நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் கடந்த வாரம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி, ரூ.13 ஆயிரம் கோடி செலவில் மின் வாகன பேட்டரி தொழிற்சாலை நிறுவப்படும். இதில் லித்தியம்-அயன் செல்கள் தயாரிக்கப்படும்.
- இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 13 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் லித்தியம் பேட்டரி உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிக்கும்.
- கடந்த 2021-இல் இந்தியாவின் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.3,169 கோடியாக இருந்தது. இது வரும் 2030இ-ல்ரூ.12.58 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.7,680 கோடி மதிப்பிலான 45 கோடி லித்தியம் பேட்டரிகளை இந்தியா இறக்குமதி செய்தது.
சர்வதேசம் :-

- சென்னை - இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
- மத்திய அரசு, 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணியர் கப்பலை இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- 'எம்வி எம்பிரஸ்' என்ற இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு :-

பள்ளிக்கல்வி துறை பற்றிய குறிப்புகள்
- 1826 - பொதுக்கல்வி வாரியம் உருவாக்கப்பட்டது
- 1841 - சென்னையில் முதல் உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது
- 1849 - பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது
- 1854 - பொதுக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1892 - சென்னை மாகாணக் கல்வி சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்தன
- 1910 - இடைநிலை கல்வி வாரியம் உருவாக்கப்பட்டது
- 1911 - முதன்முதலாகப் பள்ளி இறுதி பொதுத்தேர்வு நடத்தப்பட்டது
- 1921 - சென்னை மாகாணத் தொடக்கநிலைக் கல்வி சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்தன
- 1924 - சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கட்டாய இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது
- 1953 - சட்டக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1955 -ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
- 1956 - மதிய உணவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
- 1957 - தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1960 - பள்ளி சிறார்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
- 1964 - உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது
- 1965 - கல்லூரி கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1969 - தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கப்பட்டது
- 1972- பொதுநூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1973 - அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது
- 1976 - பள்ளிசார வயதுவந்தோர் கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1978 - மேல்நிலை பள்ளி கல்வி அறிமுகம் செய்யப்பட்டது
- 1982- சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
- 1985 - எட்டாம் வகுப்பு வரை இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது
- 1986 - தொடக்கக் கல்வி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது
- 1990 - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது
- 2001 - தனியார் பள்ளி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது
- 2002 - சமக்ர சிக் ஷா அபியான் (முழுமையான கல்வி திட்டம்) உருவாக்கப்பட்டது
- 2009 - தேசிய அளவிலான இடைநிலைக் கல்வி திட்டம்
- 2010 - சமச்சீர் கல்வி
- 2021 - இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டது
விளையாட்டு செய்திகள் :-

- ISSF ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கம் வென்றார்.
- ஜெர்மனியின் சுஹ்ல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் தனுஷ் ஸ்ரீகாந்த் 249.4 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார்.
- இந்தத் தொடரில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2 தங்கம், ஒரு வெள்ளியுடன் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.
முக்கிய நாட்கள் :-

'தமிழ்' செம்மொழியான வரலாறு
- தமிழ் செம்மொழி அறிவிப்பிற்கான போராட்டம் 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.
- இந்தியாவில் பணியாற்றி வந்த ஆங்கிலேய அதிகாரியான பிரான்சிஸ் வொய்ட் எல்லீஸ் அவர்கள் தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து தமிழ்மொழியின் தனிச்சிறப்பினையும் அதன் தொன்மையினையும் முதன் முதலில் உலகிற்கு எடுத்துக் காட்டினார்.
- அதற்கு அடுத்து 1856 ஆம் ஆண்டு கால்டுவெல் என்னும் மொழியியல் அறிஞர், தமிழ்மொழியினை ஆய்ந்தறிந்து அதன் செம்மொழித் தன்மையை A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தன்னுடைய நூலில் உலகிற்கு எடுத்துரைத்தார்.
- பரிதிமாற் கலைஞர் அவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1902 ஆம் ஆண்டு வெளியிட்ட செந்தமிழ் எனும் இதழின் மூலம் தமிழ்மொழி, உயர் தனிச்செம்மொழி என முழக்கமிட்டார்.
- 1903 ஆம் ஆண்டு தமிழ்மொழியின் வரலாறு எனும் நூலில் உலகின் தொன்மையான மொழிகளையெல்லாம் எடுத்துக்காட்டி, அவற்றுள் தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளை வெளிக்கொணர்ந்து செம்மொழி என்னும் தகுதிக்கு வலுசேர்த்தார் பரிதிமாற் கலைஞர்.
- கரந்தைத் தமிழ்ச் சங்கம், சைவ சித்தாந்த மகா சமாஜம் என பல அமைப்புகள் தமிழை செம்மொழியாக அறிவிக்கவும், இந்திய பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு முறையான இடம் தரவும் அறிவுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றின.
- 1916 இல் தனித்தியங்கும் தமிழுக்கு பிறமொழிக் கலப்பால் விளைந்த தீங்குகளைக் களைய ‘தனித்தமிழ் இயக்கத்தை’ மறைமலையடிகள் தோற்றுவித்தார்.
- 1918 இல் குலசேகரப்பட்டணத்தில் நடைபெற்ற சைவசமயமாநாட்டில், தமிழ் மொழியை ஒரு செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் மறைமலையடிகள் கையொப்பமிட்டார். இது அன்றைய ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
- 1951 இல்சாகித்திய அகெடெமி உருவாக்க மாநாட்டில், அபுல் கலாம் ஆசாத், “தமிழ் செழுமையும், தொன்மையும் மிக்க இலக்கியங்களைக் கொண்டது. அம்மொழியின் கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்குரிய தகுதி பெற்றவை. தமிழ் உண்மையிலேயே ஒரு செம்மொழி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
- 1955 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற அகில இந்தியக் கீழ்த்திசை மாநாட்டிலும் மேற்குறித்த தீர்மானம் வழிமொழியப்பட்டன.
- 1966 இல் தேவநேயப் பாவாணர், “உலகின் முதன்மையான செம்மொழி” எனும் தன் ஆய்வை வெளியிட்டார். இதில் பல உறுதியான சான்றுகளுடன், தமிழே உலகின் முதன்மொழி என்பதை நிறுவினார்.
- 1981 இல் மதுரையில் நடந்த ஐந்தாம் தமிழ் மாநாட்டில் தமிழை செம்மொழியாக அறிவிக்கும் கோரிக்கை குறித்து மணவை. முஸ்தபா உரையாற்றினார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனார், தமிழ் செம்மொழி கோரிக்கையை அரசின் கோரிக்கையாக ஏற்று அதற்குரிய ஆவணங்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.
- 1995 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போதும் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
- 2000 இல் அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் (Dr. George L. Hart), தமிழின் செவ்வியல் தன்மை பற்றி வெளியிட்ட கட்டுரையில், “தமிழின் செவ்வியல் தன்மையை மறுப்பது, இந்தியப் பண்பாட்டின் உயிர்மூச்சாய் விளங்குவனவற்றுள் ஒன்றை மறுப்பதற்கு ஒப்பாகும்” என எழுதுகிறார்.
- 2002-2003 இல் தில்லி தமிழ்ச் சங்கம், பெங்களூர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், தலைநகர் தமிழ்ச்சங்கம் மேலும் பல அமைப்புகள் தொடர்ந்து தமிழை செம்மொழியாக்க அரும்பாடுபட்டன.
- 2004-இல் கரந்தை தமிழ்ச் சங்கம், கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி, ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று நடுவண் அரசிற்கு அனுப்பியது.
- 2004- இல் அன்றைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், நாடாளுமன்ற இரு அவைக் கூட்டுக் கூட்டத்தில் “தமிழ் செம்மொழி” என அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
- பலருடைய தொடர் முயற்சிகளுக்குப் பின், 12.10.2004 தமிழ் மொழி செம்மொழி என நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நாளை(அக்டோபர் 12) தமிழ்நாடு அரசு ‘செம்மொழி தமிழ் தினமாக’ கொண்டாடி வருகிறது. செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆய்வு நிறுவனம். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2008 மே 19-ஆம் தேதி முதல் சென்னையில் இயங்கிவருகிறது. இந்த மையத்தின் வழியாகத் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆட்சி மொழியாக தமிழ்
- இந்தியாவில் தமிழகம், புதுச்சேரியில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது.
- இலங்கையில் 3 ஆட்சி மொழிகளில ஒன்றாக தமிழ் உள்ளது.
- மலேசியா மற்றும் சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது.
- தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியல் அமைப்பின் அங்கீகாரம் உள்ளது.
இந்தியாவில் உள்ள செம்மொழிகள்
- தமிழ்(2004-ஆம் ஆண்டில் செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி)
- சமஸ்கிருதம்(2005 முதல்)
- தெலுங்கு (2008 முதல்)
- கன்னடம் (2008 முதல்)
- மலையாளம் (2013 முதல்)
- ஒடியா (2014 முதல்)
மொழி அறிஞர்கள் கூறும் செம்மொழிக்கான பதினோரு தகுதிகள்
1. தொன்மை
2. கிளைமொழிகளின் தாய்மொழி
3. பிறமொழிகளின்றித் தனித்தியங்கும் ஆற்றல்
4. பிறமொழிகளிலிருந்து சிறப்பால் வேறுபடுதல்
5. மொழி இலக்கணக் கோட்பாடுகள் உடைமை
6. பிற மொழியாளர்க்கும் இனத்தார்க்கும் பொருந்தும் இலக்கியப் பொதுமை
7. பட்டறிவு இலக்கியங்கள்
8. சமயச் சார்பின்மை
9. நடுநிலைமையான இலக்கியங்கள்
10. உயரிய சிந்தனைகளைத் தரும் இலக்கியங்கள்
11. கலை இலக்கிய மேன்மை.
Tags:
Current Affairs